Friday, December 12, 2008

தூக்கத்தைக் கெடுக்கும் உணவுப் பழக்கம்!

மனித வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியம். ஒருவரின் தூக்கம் அவரது வேலையில் பிரதிபலிக்கிறது. குறைவான அல்லது இடையூறான தூக்கம் என்றால் அது வேலையைப் பாதிப்படையச் செய்யலாம். அல்லது மற்றவர்களுடன் நீங்கள் பேசும் உரையாடலானது தூக்கமின்மையால் பாதிப்புக்குள்ளாவதோடு கவனத்தையும் சிதறச் செய்யும். தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் ப்ரஷ் ஆகவும் களைப்பின்றி கண்காணிப்புடனும் இருக்கிறோம். தூக்கத்தின் தேவை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.சராசரியாக சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது. நீங்கள் உரிய அளவு தூக்கத்தை மேற்கொண்டீர்களா என்பதை அடுத்த நாள் உங்களின் வேலை மற்றும் நீங்கள் உணர்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அதிக அளவு தூக்கமும் மிகவும் குறைவான அளவு தூக்கமும் மிகவும் களைப்பையும் எரிச்சலையும் தரும். தூக்கத்தின் போது தான் வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும் என்பதால் குழந்தைகள் சிறியவர்கள் டீன்-ஏஜ் வயதுடையோருக்கு பெரியவர்களைக் காட்டிலும் அதிக நேரம் தூரம் தேவைப்படும். வயதானவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவையில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். வயது வந்த பெரியவர்களுக்கு நிலையான நீடித்த தூக்கம் என்றால் வயது முதிர்ந்தோரின் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது. வயதானவர்களைப் பொருத்தவரை இரவில் அடிக்கடி முழித்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். பொதுவாக தூக்கம் உடலில் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் என்று எதுவும் அறிவியல்பூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை. நம் உடலில் கடிகாரம் போன்று சுழற்சி முறையின் அடிப்படையிலேயே தூக்கமும் ஏற்படுகிறது. உடலில் நிகழும் சில ரசாயன மாற்றங்களாலும் தூக்கம் தூண்டப்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவும் ஒரு முக்கியக் காரணமாகிறது.

தூக்கத்தைப் பாதிக்கக்கூடிய உணவுமுறைகள் அல்லது வகைகள்:

அதிக அளவு உணவு சாப்பிடும்பட்சத்தில் அது அஜீரணப் பிரச்சினையாகி தூக்கத்தை பாதிக்கிறது.

ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். ஆனால் அதுவே பழக்கமாகி விடும்பட்சத்தில் தூக்கத்தை கெடுக்கும் பிரச்சினையாகி விடுவதும் உண்டு. உங்கள் உடலில் ஆல்கஹால் தண்ணீரை இழக்கச் செய்யும் என்பதால் அடுத்த நாள் முழுவதும் உடல் களைப்படைய காரணமாகிறது.

எந்த உணவிலும் காபீன் இருந்தால் அது தூக்கத்தைப் பாதிக்கிறது என்றாலும் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. காபீன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஒவ்வாது என்றால் அவற்றை வயது முதிர்ந்தோர் தவிர்க்கலாம்.

அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை மாலையிலோ அல்லது இரவிலோ நீங்கள் சாப்பிட்டால் ஜீரணம் பாதிப்புக்குள்ளாகி இருதயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். உங்களின் தூக்கமும் தடை படலாம்.

இருதய நோய் அல்லது அமில சுரப்பு உள்ளவர்கள் இரவில் வெகுநேரமாகி உண்பதைத் தவிருங்கள். வெறும் வயிற்றுடன் இருந்து அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நன்றாக சாப்பிட்ட பின்னரும் இரவில் மீண்டும் சாப்பிட்டாலோ தூக்கத்தின் போது பாதிப்பைத் தரும்.
இரவில் சாப்பிட்ட பின்னர் திரவ உணவு வகைகளை அருந்துவதைத் தவிர்க்கவும். சாப்பிட்ட பின் திரவப் பொருட்களை எடுத்துக் கொண்டால் அது சிறுநீருக்காக உங்களை இரவில் எழுந்திருக்கச் செய்யும். அமினோ அமிலம் அடங்கிய பால் மற்றும் சிறிதளவு தேன் போன்றவை உங்களின் தூக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும். இயற்கையான தூக்கத்தை கட்டுப்படுத்தாதீர்.

பொதுவாக வீட்டுப் பிரச்சினைகளையோ அலுவலகப் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். எது நடந்தாலும் நாம் தூங்காம இருந்து என்ன ஆகப்போகிறது?

நடப்பவை நன்மைக்கே என்று நினைத்து குறித்த நேரத்தில் தூங்குங்கள். குறித்த நேரத்தில் எழுந்து விடுங்கள்.



மக்கள் ஆரோக்கியமாக வாழ
திரு
புதுவை அறிவியல் இயக்கம்

No comments: